லியோ படம் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் திரையரங்குகளில் டிக்கெட் முன்பதிவு தொடங்கிவிட்டது. விஜய் ரசிகர்களும் போட்டிப்போட்டு கொண்டு முன்பதிவு செய்து வருகின்றனர். கண்டிப்பாக லியோ திரைப்படம் முந்தைய படங்களின் வசூல் சாதனையை முறியடிக்கும் என்று ரசிகர்கள் எதிர்ப்பார்த்து கொண்டிருக்கின்றனர்.

தமிழக அரசும் லியோ படத்திற்கு சிறப்புக்காட்சிக்கான அனுமதியை கொடுத்த நிலையில்.. தமிழகத்திலுள்ள திரையரங்குகள் அக்டோபர் 19 முதல் 24 வரையுள்ள இந்த 6 நாட்கள் மட்டும் கூடுதலாக ஒரு காட்சியை சேர்த்துக் கொள்ளலாம். ஒரு நாளைக்கு 5 காட்சிகளுக்கு மட்டுமே அனுமதி.
இந்த செய்தியை அறிந்த விஜய் ரசிகர்கள் லியோ படத்திற்கு அதிகாலை 4 அல்லது 7 மணி காட்சிகள் இருக்குமா என்று கேள்வி எழுப்பி வந்தனர். கேரளா மற்றும் வெளிநாடுகளில் அதிகாலை 4 மணி காட்சியுள்ளதால் தமிழகத்திலும் இருக்க வேண்டும் என கோரிக்கையும் வைத்தனர்.

இந்நிலையில் அமைச்சர் மு.பெ. சாமிநாதன் சமீபத்திய செய்தியாளர் சந்திப்பில் லியோ படத்தின் சிறப்புக்காட்சியை பற்றி விளக்கமளித்துள்ளார். அவர் கூறியது “லியோ படத்தின் முதல்காட்சி காலை 9 மணிக்கு மட்டுமே தொடங்கும். அதிகாலை காட்சிகளுக்கு வாய்ப்பு இல்லை. ஒரு நாளைக்கு கூடுதலாக ஒரு காட்சி என 5 காட்சிகளுக்கு மட்டுமே அனுமதி.
இதற்கு முன்பு விக்ரம் படத்திற்கு இவ்வாறு அனுமதி கொடுத்தோம். ஜெயிலர் படத்திற்கு சிறப்புக்காட்சி வேண்டி எந்த கோரிக்கையும் வரவில்லை. யார் கோரிக்கை வைக்கிறார்களோ அவர்களின் கோரிக்கை மட்டுமே பரிசீலனை செய்யப்படும்” என்று கூறி லியோ படத்திற்கு அதிகாலை காட்சிகள் இல்லை என்பதை உறுதிப்படுத்தி விட்டார்.
இதை மேலும் உறுதிப்படுத்தும் விதமாக தமிழக அரசும் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. அதில் அக்டோபர் 19 முதல் 24 வரை போடப்படும் 5 காட்சிகள் காலை 9 மணி தொடங்கி இரவு 1.30 மணிக்குள் முடிய வேண்டுமென்று குறிப்பிடப்பட்டுள்ளது.
கண்டிப்பாக இது விஜய் ரசிகர்களுக்கு வருத்தமாக தான் இருக்கும். இதனால் முதல்நாள் வசூல் குறைவாக வாய்ப்புள்ளது என புலம்பி வருகிறார்கள்.
