கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்துக்குட்பட்ட 10வது வார்டில் கடந்த நவம்பர் மாதம் 10ஆம் தேதி பாராளுமன்ற உறுப்பினரால் பூங்கா ஒன்று திறக்கப்பட்டது.
இப்படி திறந்து வைக்கப்பட்ட இந்த பூங்கா தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மாநகராட்சி 2025 – 26 பட்ஜெட்டில் இந்த கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் 10வது வார்டில் 1 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஸ்டெம் பார்க் கட்டப்படும் என்ற அறிவிப்பு வெளியானது.
அந்த வகையில் கோவை வடக்கு மண்டல தலைவர் கதிர்வேலின் சொந்த வார்டில் உள்ள பூந்தோட்டம் நகர் பகுதியில் திறந்து வைக்கப்பட்ட பூங்கா ஸ்டெம் பார்க்கிற்கு உண்டான எந்தவித அமைப்பு இல்லாமல் சாதாரண விளையாட்டு பூங்காவாக மற்றும் பொதுமக்களின் நடைபாதை பூங்காவாக திறந்து வைக்கப்பட்டது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை உண்டாக்கி உள்ளது.

இதனைத் தொடர்ந்து கோவை பாஜக மாநகர் மாவட்ட அரசு தொடர்பு பிரிவு மாவட்ட தலைவர் மேகலதா தலைமையில் நிர்வாகிகள் கோவை மாநகராட்சி ஆணையரிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளனர்.
அதில் கோவை மாநகராட்சி 10வது வார்டு சரவணம்பட்டி பூந்தோட்டம் நகர் பகுதியில் திறந்து வைக்கப்பட்டுள்ள பூங்கா பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட ஸ்டெம் பார்க் பூங்கா ஆனால் ஸ்டெம் பார்க்குக்கு தேவையான விளையாட்டு உபகரணங்கள், அறிவியல் தொழில்நுட்ப, இன்ஜினியரிங், கணித பாடங்களுக்கு தேவையான உபகரணங்கள் விளையாட்டு பொருட்கள் ஏதுமின்றி வெறுமனே 8 சேர் மற்றும் 4 குழந்தைகள் விளையாடும் வகையில் ஊஞ்சல், சறுக்கேறுதல் மற்றும் சைக்கிள் போன்ற அமைப்பு கொண்ட விளையாட்டு சாதனம் மட்டுமே உள்ளது.

குழந்தைகள் அறிவியல் கணிதம் போன்ற பாடங்களை விளையாட்டின் மூலமாகவும் தெரிந்து கொள்ளலாம் என்று உருவாக்கப்பட வேண்டிய ஸ்டெம் பார்க் மத்திய அரசின் மானிய நிதியின் மூலம் உருவாக்கப்பட வேண்டும். ஆனால் வடக்கு மண்டல தலைவரும் மாநகராட்சி வார்டு உறுப்பினருமான கதிர்வேல் தனது அதிகாரத்தை பயன்படுத்தி பூங்கா என்ற பெயரில் 92 சென்ட் இடத்தில் சுற்று சுவர் மட்டும் கட்டி நடைபாதை அமைத்து அதை அறிவியல் பூங்கா என்ற கணக்கில் கொண்டு வந்திருப்பது அவரின் முறைகேடான செயலை வெளிப்படுத்தும் விதமாக உள்ளது.
எனவே மாநகராட்சி ஆணையர் இதில் தலையிட்டு விசாரணை மேற்கொண்டு பட்ஜெட்டில் அறிவித்த திட்டத்தின் படி இந்த பூங்கா அமைக்கப்பட்டுள்ளதா இதில் எவ்வளவு முறைகேடு நடந்துள்ளது என்பதை ஆய்வு செய்து பொதுமக்களுக்கு பயன்பெறும் வகையில் ஸ்டெம் பார்க் அமைக்க வேண்டும் என்று மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.
இந்த சம்பவம் தற்போது அந்த பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
